General
தன் மகளுக்கு தாய் மாமன் கொடுத்த சீர்…. ஊர்வலமாக சென்று திருப்பி அளித்த சகோதரி…. ஏன் தெரியுமா…???
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கீழ் நெடுங்கல் காலனியை சேர்ந்தவர் மீனா (36). சில ஆண்டுகளுக்கு முன் மீனாவின் கணவர் இறந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனாவின் மகள் வினிதாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்துள்ளது. அதில் மீனாவின் சகோதரர் சரவணன் தாய் மாமன் சீதனமாக புத்தாடை, பழங்கள், பாய், தலையாணை, தட்டு, உட்பட ரூ. 2500 ரொக்கம் ஆகியவற்றை ஊர்வலமாக சென்று வழங்கியுள்ளார். இந்நிலையில் சரவணன் சமீபகாலமாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். மீனாவின் மகளுக்கு சீர் செய்ததால் தான் சரவணன் கடன்பட்டதாகவும், அந்த சீரை திருப்பியளிக்குமாறும் சரவணனின் மனைவி ரூபினி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனையடுத்து மீனா அவரின் சகோதரர் என்னென்ன செய்தாரை அதை அப்படியே தனது உறவினர்களுடன் ஊர்வலமாக சென்று திருப்பி அளித்துள்ளார். தாய் மாமன் சீதனத்தை சகோதரி ஒருவர் திருப்பியளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.